வெண்பொங்கல் செய்வது எப்படி? மார்கழி மாத ஸ்பெஷல்!!!
வெண்பொங்கல்
தேவை:
பச்சரிசி - 2 கப், பயத்தம்பருப்பு - அரை கப், நெய் - 5 டேபிள்ஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப. தாளிக்க: மிளகு - ஒரு டேபிள்ஸ்பூன், சீரகம் - ஒரு டேபிள்ஸ்பூன், இஞ்சித் துருவல் - ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன், கறிவேப்பிலை - 10 இதழ்கள், உடைத்த முந்திரித் துண்டுகள் - ஒரு டேபிள்ஸ்பூன்.
![vikatan%2F2019-12%2F95510ee1-529d-4979-a](https://images.assettype.com/vikatan%2F2019-12%2F95510ee1-529d-4979-a5af-d35c1f7d8e7b%2F102.jpg?w=640&auto=format%2Ccompress)
செய்முறை:
அரிசி, பருப்பு இரண்டையும் வெறும் வாணலியில் லேசாக வறுக்கவும். மிளகு, சீரகம் இரண்டையும் ஒரு டீஸ்பூன் நெய்விட்டு வறுக்கவும். வறுத்த மிளகு, சீரகத்தில் பாதியை எடுத்து வைத்துக்கொண்டு, மீதியை கொரகொரப்பாக, ஒன்றிரண்டாகப் பொடிக்கவும். அடி கனமான பாத்திரத்தில் 5 கப் நீர்விட்டு, கொதித்ததும் வறுத்துவைத்துள்ள அரிசி பருப்புகளைக் கழுவி அதில் சேர்க்கவும். நன்றாகக் கிளறிவிடவும். பாதியளவு வெந்ததும் உப்பு சேர்த்து, மீண்டும் குழையவிடவும். 3 டேபிள்ஸ்பூன் நெய்யைப் பொங்கல் வேகும்போது இடையிடையே சேர்க்கவும்.
பொங்கல் நன்றாக வெந்ததும் வாணலியில் மீதியுள்ள நெய்யைவிட்டு இஞ்சி, பெருங்காயத்தூள், முந்திரி சேர்த்து வதக்கி, வறுத்த முழுமையான மற்றும் கொரகொரப்பாகப் பொடித்த மிளகு, சீரகத்தை இறுதியாகச் சேர்த்து ஒருமுறை புரட்டி கறிவேப்பிலை சேர்த்து வதக்கி, அதைப் பொங்கலில் சேர்த்து இறக்கவும். நன்றாகக் கலந்துவிடவும். குக்கரில் செய்தால் 4 கப் தண்ணீர் போதுமானது.
சிறப்பு: மார்கழி மாதத்தில் அதிகாலை இந்த வெண்பொங்கலைச் செய்து பகவானுக்குப் படைத்து, பிறகு பக்தர்களுக்கு விநியோகம் செய்வார்கள்.
Comments
Post a Comment