திருவாதிரை தாளகக் குழம்பு (ஏழு காய் குழம்பு) செய்வது எப்படி? மார்கழி மாத ஸ்பெஷல்!!!
திருவாதிரை தாளகக் குழம்பு (ஏழு காய் குழம்பு)
தேவை:
பறங்கிக்காய், வாழைக்காய், சர்க்கரைவள்ளிக்கிழங்கு, சேப்பங்கிழங்கு, சேனைக்கிழங்கு, கொத்தவரங்காய், பூசணிக்காய் (எல்லாவற்றையும் ஒரே அளவுள்ள துண்டுகளாக நறுக்கியது) - 2 கப், திக்கான புளிக்கரைசல் - அரை கப், மஞ்சள்தூள் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப. வறுப்பதற்கு: பச்சரிசி - 2 டேபிள்ஸ்பூன், கறுப்பு எள் - ஒரு டேபிள்ஸ்பூன், துவரம்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய் - 4, தேங்காய்த் துருவல் - கால் கப், பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன், கடலைப்பருப்பு - ஒரு டீஸ்பூன், மல்லி (தனியா) - 2 டீஸ்பூன், எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன். தாளிக்க: எண்ணெய் - ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை - 8 இதழ்கள், கடுகு - ஒரு டீஸ்பூன்.
![vikatan%2F2019-12%2Faca44bfc-c588-4330-b](https://images.assettype.com/vikatan%2F2019-12%2Faca44bfc-c588-4330-b286-e99650c8b26e%2F118.jpg?w=640&auto=format%2Ccompress)
செய்முறை:
வெறும் வாணலியில் பச்சரிசியை சிவக்க வறுத்து தனியே வைக்கவும். பிறகு கறுப்பு எள்ளையும் வறுத்துத் தனியே வைக்கவும். அதே வாணலியில் ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய்விட்டு துவரம்பருப்பு, கடலைப்பருப்பு, மல்லி, காய்ந்த மிளகாய், பெருங்காயத்தூள் ஒவ்வொன்றாகப் போட்டு வறுத்து இறுதியில் தேங்காய்த் துருவலையும் சேர்த்து இரண்டு புரட்டு புரட்டி இறக்கவும். மிக்ஸியில் வறுத்த பச்சரிசியைப் போட்டு சுற்றி, பிறகு எள் மற்ற அனைத்து வறுத்த பொருள்களையும் சேர்த்து நீர்விட்டு சற்றுக் கொரகொரப்பாக அரைக்கவும்.
அகன்ற பாத்திரத்தில் நறுக்கிய ஏழு காய்களையும் சேர்த்து உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து அளவான நீர்விட்டு வேகவிடவும். காய்கள் பாதியளவு வெந்ததும் புளிக் கரைசலை அதில் சேர்த்துக் கொதிக்கவிடவும். எல்லாமுமாகச் சேர்ந்து கொதித்து காய்கள் வெந்ததும் அரைத்த விழுதைச் சேர்த்து மேலும் இரண்டு கொதிவிட்டு (விருப்பப்பட்டால் ஒரு டீஸ்பூன் வெல்லம் சேர்க்கலாம்) தாளிக்கக் கொடுத்தவற்றைத் தாளித்துச் சேர்த்து இறக்கவும். இறக்கியபின் எல்லாவற்றையும் நன்றாகக் கலந்துவிடவும்.
குறிப்பு: திருவாதிரைத் தாளகக் குழம்புக்கு முடிந்தவரை 7, 9 என்ற ஒற்றைப் படை அடிப்படையில் நாட்டுக் காய்களைச் சேர்த்துத் தயாரிக்கவும். திருவாதிரைக் களியுடன், இந்தத் தாளகக் குழம்பையும் சேர்த்துப் படைத்து, பின்னர் களிக்கு இந்தக் குழம்பைத் தொட்டு சாப்பிடவும்.
Comments
Post a Comment